June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

குட்கா வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கிறது- முன்னாள் அமைச்சர்கள் கலக்கம்

1 min read

Gutka case trial heats up again- Ex-ministers in turmoil

21.11.2023

சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் செங்குன்றம் பகுதியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த குடோனை நடத்தி வந்த அண்ணாநகரை சேர்ந்த மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் சட்ட விரோதமாக குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதற்காக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் லஞ்சம் கொடுத்திருப்பதையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் அ.தி.மு.க. அமைச்சர்களாக இருந்த விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது தவிர அப்போது டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரன், கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோரது பெயர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோரின் பெயர்களும் டைரியில் இடம்பெற்று இருந்தது.
இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பிய நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளர்களான மாதவராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா மற்றும் சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 2021-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
குட்கா வழக்கில் தொடர்புடையதாக குற்ற சாட்டப்பட்ட முன்னணி அமைச்சர்கள் விஜய பாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கின. இதன் அடிப்படையில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சி.பி.ஐ. கோர்ட்டில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர் இருவர் மீதும் கோர்ட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளுக்கு கவர்னரின் அனுமதி பெற வேண்டியிருந்தது. இதையடுத்து தமிழக அரசு, விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகிய இருவர் மீதான விசாரணைக்கு அனுமதி கேட்டு கடந்த செப்டம்பர் மாதம் கவர்னருக்கு கோப்புகளை அனுப்பி இருந்தது.
இதற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இருவர் மீதான அடுத்த கட்ட விசாரணைக்கான தடை நீங்கியுள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பதையடுத்து விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீதான விசாரணை மீண்டும் சூடுபிடித்துள்ளது.
சென்னையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இருவர் மீதான தொடர் விசாரணைக்கு அனுமதி கிடைக்காமல் இருந்து வந்ததால் வழக்கு விசாரணை இதுவரை 20 முறை ஒத்திவைக்கப்பட்டு விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

கவர்னரின் அனுமதியால் தற்போது விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் இனி தடையின்றி விசாரணை நடைபெற வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சி.பி.ஐ. அதிகாரிகளும் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர். தேவைப்பட்டால் விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தவும் அவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

விசாரணையின் அடிப்படையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் பிறகு சி.பி.ஐ. கோர்ட்டில் அடுத்தடுத்த நடவடிக்கைகளும் வேகமெடுக்க உள்ளன. விஜய பாஸ்கர், பி.வி.ரமணா இருவருக்கும் கோர்ட்டில் இருந்து விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது.

குற்றப்பத்திரிகை நகலை நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்வதற்காக இந்த சம்மன் அனுப்பப்படுகிறது. அப்படி அனுப்பப்படும் சம்மனை ஏற்று இருவரும் கோர்ட்டில் ஆஜராவார்கள்.

இதன் மூலம் கடந்த சில ஆண்டுகளாக முடங்கி கிடந்த குட்கா வழக்கின் விசாரணை மீண்டும் வேகம் எடுக்க உள்ளது.

இந்த விசாரணையின் போது முன்னாள் போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரும் கோர்ட்டில் ஆஜராக வாய்ப்பு உள்ளது. வழக்கு விசாரணை தீவிரமாகி இருப்பதையடுத்து முன்னாள் அமைச்சர்களான விஜய பாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் அதனை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். போலீஸ் அதிகாரிகளான டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் ஆகியோரும் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.