பாவூர்சத்திரம் அருகே வீடியோ வெளியிட்டு பைனான்ஸ் அதிபர் தற்கொலை
1 min read
Finance tycoon commits suicide by posting video near Bhavoorchatram
24.11.2023
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே குடும்பத்தகராறில் பைனான்ஸ் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் வெளியிட்ட வீடியோ வாட்ஸ்அப்பில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம்
பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் பரிமளம் என்பவரது மகன் அருணாசலம் (வயது 27) கபடி வீரரான இவர், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார். இவருக்கும் செட்டியூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் பகவதி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பகவதி கணவரை பிரிந்து செட்டியூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அருணாசலம் கடந்த 21ந்தேதி (செவ்வாய்) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தாராம். மயங்கி கிடந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அருணாசலம் தற்கொலை செய்வதற்கு முனபு தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து வீடியோ எடுத்து, அதனை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில், தனது மனைவி மற்றொரு ஆணுடன் போனில் பேசி வருவதாகவும், அதனை கண்டித்தும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை என்றும், தனது மனைவியின் பெற்றோர் தொழில்ரீதியாக பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்ததாகவும், இதனால் விஷமருந்தி தற்கொலை செய்து கொள்வதாகவும் பேசி இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் பாவூர்சத்திரம் போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பைனான்ஸ் அதிபர் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.