குஷ்பு வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
1 min read
Police security at Khushbu’s house
24.11.2023
மணிப்பூர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தி.மு.க. ஆதரவாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்று குஷ்பு பதிலளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நடிகை குஷ்பூவுக்கு சமூக வலைதளத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
சேரி மொழி என நடிகை குஷ்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் மிரட்டல் வருவதாக எழுந்த புகாரை அடுத்து 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குஷ்பு மீது புகார்
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கார்த்திக் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகை குஷ்பு அவரது எக்ஸ் சமூக வலைதளத்தில் சேரி மொழியில் பேசத் தெரியாது என கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது கருத்து மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. சேரியில் பேசுகின்ற மொழி என்ற வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்ட தகாத மொழி என்றும் பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நடிகை குஷ்பு மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.