ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வழக்கில் காரசார விவாதம்- நாளை தீர்ப்பு
1 min read
IAS Enforcement department summons the officer and discuss the case – verdict tomorrow
27.11.2023
ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வழக்கில் காரசார விவாதம் நடந்தது- நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அமலாக்கத்துறை சோதனை
அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் குவாரிகளில் மணல் எடுப்பதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் படி கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் தமிழகத்தில் மணல் குவாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் 10 மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசராணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் வாதாடியதாவது: யாரையும் பாதுகாக்கவில்லை; நடவடிக்கை எடுப்பதை விடுத்து கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது ஏன்? மணல் குவாரி குறித்து விசாரணை நடத்துவது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. கனிமவளக் குற்றம் குறித்து மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர நடவடிக்கை எடுக்க முடியாது. குவாரி உரிமையாளர்களின் தவறுக்கு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடியுமா?.
இவ்வாறுதமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அதிகாரம்
அமலாக்கத்துறை தரப்பில் வாதிடுகையில், ‛‛ஊழல், மோசடி புகார்களை விசாரிக்க அதிகாரம் உள்ளது. முதல் தகவல் அறிக்கைகளை கேட்டும் டிஜிபி தரவில்லை. ரூ.4500 கோடிக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை பாதுகாக்க தமிழக அரசு முயற்சிக்கிறது.
மணல் அள்ளுவதில் முறைகேடு நடந்துள்ளதை தமிழக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதிகாரிகள் யாரையும் குற்றவாளியாக வழக்கில் சேர்க்கவில்லை. சம்மனுக்கு எதிராக அதிகாரிகளுக்கு பதில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது ஏன்?” என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஐகோர்ட் கேள்வி
இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதிகள் கூறியதாவது: சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளவை தவிர அனைத்து குவாரி விவரங்களையும் அமலாக்கத்துறை எப்படி கோரலாம்?. விசாரணைக்கு உதவி கோருவதற்கும் சம்மன் அனுப்புவதற்கும் வித்தியாசம் உள்ளது.
சட்ட விரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதா?. எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் அமலாக்கத்துறை எப்படி விசாரணை நடத்த முடியும்?. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது ஏன்?. இவ்வாறு அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்த வழக்குகளில் நாளை(நவ.,28) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.