400 மணி நேர போராட்டத்திற்குப் பின் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு
1 min read1 workers trapped in the mine safely rescued after 400 hours of struggle
28.11.2023
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.
கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது. இன்று மாலை தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. இதனால் அவர்களது உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்தனர்.
இதற்கிடையே, ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி கலந்துரையாடினார்.
இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களை மத்திய மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.
தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
இந்நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதை அறிந்து நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். 17 நாட்கள் அவர்கள் கடின உழைப்பு, மீட்பு முயற்சி தடைகளை சந்தித்தது, மனித சகிப்புத்தன்மைக்கு சான்றாக உள்ளது. அவர்களின் மன உறுதிக்கு தேசம் வணக்கம் செலுத்துகிறது. வரலாற்றில் மிகவும் கடினமான மீட்புப் பணிகளில் ஒன்றைச் செய்ய நம்பமுடியாத மன உறுதியுடன் செயல்பட்ட அணிகள் மற்றும் அனைத்து நிபுணர்களையும் வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல் பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், உத்தரகாசியில் நமது தொழிலாளர் சகோதரர்களின் மீட்புப் பணியின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, உங்கள் தைரியமும் பொறுமையும் அனைவரையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இந்த நண்பர்கள் இப்போது தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திப்பார்கள் என்பது மிகவும் திருப்திகரமான விஷயம். இந்த சவாலான நேரத்தில் இந்தக் குடும்பங்கள் அனைத்தும் காட்டிய பொறுமையும் தைரியமும் போதுமான அளவு பாராட்டமுடியாது. மீட்பு நடவடிக்கையில் தொடர்புடைய அனைத்து மக்களையும் நான் வணங்குகிறேன். அவர்களின் துணிச்சலும் உறுதியும் நமது தொழிலாளர் சகோதரர்களுக்கு புது வாழ்வு அளித்துள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் மனிதநேயம் மற்றும் குழுப்பணிக்கு ஓர் அற்புதமான உதாரணத்தை அமைத்துள்ளனர் என பதிவிட்டுள்ளார்.