ஆன்லைன் மோசடியை தடுக்க புதிய திட்டம்- புதிய நபர்களுக்கு பணம் அனுப்ப 4 மணி நேரமாகும்
1 min read
New plan to prevent online fraud- 4 hours to send money to new people
1.12.2023
ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கூகுள் பே, போன் பே, பேடி எம், அமேசான் பே என ஏராளமான ஆப்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வசதியை வழங்கி வரும் நிலையில், பலருக்கும் இந்த யுபிஐ ஆப்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. ஆனால், இந்த யுபிஐ ஆப்களை வைத்துதான், ஆன்லைன் மோசடிகளும் அண்மையில் அதிகளவில் நடக்கின்றன. ஆன்லைனில் பார்ட் டைம் ஜாப், சூதாட்டம் என பல்வேறு மோசடிகளில் பணத்தை இழப்போர் பெரும்பாலும், யுபிஐ ஆப்கள் மூலமே அடுத்தடுத்து பணத்தை செலுத்தி, ஏமாறுகின்றனர். இதைக் கட்டுப்படுத்துவதற்காகவே, யுபிஐ அதாவது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு செக் வைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இது தொடர்பாக, ரிசர்வ் வங்கி, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுடன் ஆலோசனையும் நடத்தியது மத்திய அரசு. அப்போது முதன்முறையாக ஒரு கணக்குக்கு ரூ.2,000க்கு மேல் பணம் அனுப்ப 4 மணி நேரம் அவகாசம் வழங்கினால் மோசடிகளை குறைக்கலாம் என யோசனையை முன்வைத்துள்ளனர் சில அதிகாரிகள். அதன்படி, தற்போதுள்ள வசதிகளுக்கு, புதிதாக சில கட்டுப்பாடுகளை கொண்டுவர முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
அதாவது, உங்கள் நண்பருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ முதல் முறையே ரூ.2,000க்கு மேல் அனுப்ப முடியாது. முதல் முறை பணம் அனுப்பிய 4 மணி நேரத்திற்கு பிறகே, அதே நபருக்கோ அல்லது வேறு ஒருவருக்கோ கூடுதல் தொகையை அனுப்ப முடியும் என்ற வகையில் கட்டுப்பாடுகள் வரவுள்ளன. எனவே, முதல் பரிவர்த்தனையில் ஒருவருக்கு ரூ.5,000 அனுப்ப வேண்டும் என்றால், முதலில் ரூ.2,000யை மட்டும் அனுப்பிவிட்டு, அடுத்த 4 மணி நேரத்திற்குப் பிறகே மீதமுள்ள ரூ.3,000 அனுப்ப முடியும் இருந்தாலும், ஏற்கனவே, பணம் அனுப்பியவர்களுக்கு மீண்டும் அனுப்புவதில் எந்த சிக்கலும் வராது.
அதேபோல், IMPS, RTGS, NEFT பரிவர்த்தனைகளுக்காக, வங்கி கணக்கில் புதிதாக சேர்க்கப்பட்ட பயனாளர்களுக்கும் முதல் 4 மணி நேரத்தில் ரூ.2,000 மட்டுமே அனுப்ப முடியும் எனவும் கட்டுப்பாடு வரவுள்ளது.