நவ கைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: நெல்லை அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்பாடு
1 min read
Operation of Special Buses to Nava Kailaya Temples: Organized by Nellai Government Transport Corporation
1.12.2023
நவ கைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ்களை நெல்லை அரசு போக்குவரத்துக்கழகம் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் நெல்லை மண்டல பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவ கைலாய கோவில்களுக்கு சிறப்பு பஸ் சேவை இயக்கப்பட உள்ளது. அதன்படி வருகிற 17-ந் தேதி, 24-ந் தேதி, 31-ந் தேதி, ஜனவரி 7-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய 5 நாட்களில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவ கைலாய கோவில்களுக்கு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு சேவை பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நவ கைலாய பஸ்கள் மேற்கண்ட 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 6.30 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) ஆகிய இடங்களில் உள்ள நவ கைலாய கோவில்களுக்கு சென்று இரவுக்குள் நெல்லை வந்து சேரும்.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இச்சேவை சிறப்பு பஸ்களுக்கு வருகிற 4-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் ஜனவரி 13-ந் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பயண கட்டண தொகை நபர் ஒன்றுக்கு ரூ.600 ஆகும். இந்த சிறப்பு நவகைலாய பஸ் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.