பாவூர்சத்திரம் 4 வழிச்சாலை பணிகள் தாமதம் – அ.தி.மு.க. குற்றச்சாட்டு
1 min read
Pavurchatram 4 lane road works delayed – ADMK Accusation
1.12.2023
தென்காசி திருநெல்வேலி நான்கு வழிச்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதோடு பல்வேறு விதி மீறல் இருப்பதாக அ.தி.மு.க. குற்றம் சாட்டியுள்ளது.
பொது மக்களின் நலன் கருதி விரைந்து முடிக்கவும் கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பவும் தவறினால் அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளருமான ஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி – தென்காசி நான்கு வழிச் சாலைப் பணிகள் மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் நடந்து வருகின்றது. இந்த நான்கு வழிச்சாலையில் தனிநபர்களின் வசதிக்கேற்ப சாலையை கடப்பதற்கு அரசும், ஒப்பந்த தாரரும் இணைந்து பாதை அமைத்து கொடுத்தும் தனிநபர்களின் வசதிக்கேற்ப சாலையின் மையத்தில் தடுப்புச்சுவர் அமைக்காத காரணத்தால் தொடர்ந்து பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலப்பணியை அரசு எவ்வித திட்ட மிடலுமின்றி பொதுமக்களுக்கு தகுந்த மாற்றுப்பாதை ஏதும் ஏற்பாடு செய்து தராமல் ஆரம்பித்ததால் பொது மக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மிக வும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பாலப்பணிகள் நடை பெறும் இடத்தின் அருகே ஒளவையார் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி உள்ளது. எனவே அரசு உரிய சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும் கேரளாவிற்கு கனிமங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் கிராமச் சாலைகளின் வழியே இயக்குவதால் கிராமச் சாலைகள் அனைத்தும் சேத மடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற சாலைகளாக மாறி விட்டது. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது. அரசு உடனடியாக மேற் கண்ட குறைகளை சரிசெய்து பொதுமக்களுக்கு சரியான சாலைவசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்
இல்லையெனில் விரைவில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடை பெறும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.