தென்காசி: புதிய முதலீடுகள் மாநாட்டில் 1141 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
1 min read
Tenkasi: MoU for 1141 crore in new investments conference
1.12.2023
தென்காசி மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க 78 தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.1141 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாவட்ட அளவிலான முதலீடுகள் மாநாடு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் இலஞ்சி பேரூராட்சி ஸ்ரீ சாரதாம்பா கிராண்ட் மஹாலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மாவட்ட அளவிலான முதலீடுகள் மாநாடு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.இரவிச்சந்திரன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி எஸ்.பழனிநாடார், சங்கரன் கோவில் வழக்கறிஞர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் டாக்டர் சதனதிருமலைக் குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தென்காசி மாவட்டத்தில் புதிய தொழில்கள் தொடங்க 78 தொழில் நிறுவனங்கள் சார்பில் ரூ.1141 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வரும் ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இது குறித்து தொழில் நிறுவனங்கள் தொழில் முனைவோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான மாவட்ட அளவிலான தொழில் முதலீடுகள் மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்ச்சியில் தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 57 நபர்களுக்கு ரூ.148.04 இலட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கிவரும் தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பின் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவது இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். மேலும், “மீள்திறனுடன், நீடித்து நிலைக்கத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” ஆகும். கடந்த 10.08.2023 அன்று சென்னையில் நடைபெற்ற இம்மாநாட்டின் முன்னோட்ட அறிமுக விழாவின்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் Administration இலச்சினையை வெளியிட்டார்.
தென்காசி மாவட்டமானது விவசாயத்திற்கு அடுத்தபடியாக தென்னை நார் சார்ந்த தொழில்கள் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்புகள் ஆகியவற்றை முக்கிய தொழிலாக
கொண்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் இயற்கை சூழல், புதியதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களு க்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும். தென்காசி மாவட்டத்தில் நிலவும் மூலப்பொருள்களின் வளம், உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள்,
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிக ரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.
தொழில் நிறுவனங்களை வஊக்குவிக்கும் வகையில் முதலீட்டு மானியம், மின்
மானியம், கட்டண மானியம், தரச்சான்றிதழ் மானியம் உள்ளிட்ட பல்வேறு மானியங்களை அரசு வழங்குகிறது. இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்தி தென்காசி மாவட்டத்தில் புதிய பல தொழில்களை தொடங்க வருமாறு தொழில் முனைவோர்களை கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட தொழில் மைய திட்ட மேலாளர் சு.இராமச்சந்திரன் அவர்கள் மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்ட நிறுவனங்களுக்கு தென்காசி நகர் மற்றும் ஊரமைப்பு துறை இணை இயக்குநர் ரங்கநாதன் கட்டிட வரைபட ஒப்புதல் பெறும் வழிமுறைகளையும், திருநெல்வேலி சிட்கோ கிளை மேலாளர் எஸ்.சத்யராஜ் சிட்கோ தொழிற்பேட்டை விபரம் மற்றும் ஒதுக்கீடு பெறும் வழிமுறைகளையும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் திருநெல்வேலி கிளை மேலாளர் தொழில் நிறுவனங்களுக்கு நிதி வசதி குறித்த விபரங்களையும், தென்காசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை உதவி இயக்குநர் அ.கருணாகரன் தொழிலக உரிமம் பெறுதல் குறித்த வழிமுறைகளையும் விளக்கமாக எடுத்துரைத்தனர்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய, பொது மேலாளர் ப.மாரியம்மாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தி.உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்றத் தலைவர் ஆர்.சாதிர், நகர்மன்றத் துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா, தென்காசி ஒன்றியக் குழுத்தலைவர் வல்லம் எம்.ஷேக் அப்துல்லா, இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.சின்னத்தாய், இலஞ்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மு.முத்தையா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெ.சண்முக வடிவு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிர மணியன் மற்றும் மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனச் சங்கத் தலைவர் செ.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.