பாவூர்சத்திரம் அருகே மனைவி இறந்த மறுநாளே உயிரிழந்த கணவர்
1 min read
The husband died the day after his wife’s death near Paoorchatram
1.12.2023
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டியில் மனைவி இறந்த மறுநாளே கணவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் நாடார் (வயது 84). விவசாயி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 84). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். தம்பதியர் இருவரும் தங்கள் மகன் வீட்டில் வசித்து வந்தனர். தனது மகன், மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, பேரக்குழந்தைகள் வந்த போதும், வெளியிடங்களுக்கு செல்லும் போது கணவன், மனைவி இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர்.
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பேச்சியம்மாள் கடந்த 28ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை உயிரிழந்தார். இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை அன்று மாலை நல்லடக்கம் செய்தனர். இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு வீட்டிற்கு வந்த அருணாசலம் நாடார் மனைவி இறந்த சோகத்திலேயே இருந்தார். மறுநாள் (புதன்கிழமை) காலையில் எழுந்ததில் இருந்து மனைவி பேச்சியம்மாளை நினைத்து கண் கலங்கியவாறே இருந்த அருணாசலநாடார் அன்று மாலை திடீரென உயிரிழந்தார்.
இது பற்றி அறிந்த உறவினர்கள் திரண்டு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மனைவியின் உடலுக்கு அருகில் இவரது உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.
வாழ்நாளில் மட்டுமன்றி சாவிலும் இணை பிரியாமல் மனைவி இறந்த மறுநாளே கணவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.