திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு நேர ஒதுக்கீடு டோக்கன் 10 இடங்களில் வழங்கப்படும்
1 min read
Time Allotment Token for Vaikunda Ekadasi Darshan at Tirupati will be issued at 10 places
2.12.2023
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையான் கோவிலில் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வரும் 10-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 7 லட்சம் டிக்கெட்டுகள் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்த மாதம் 23-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
நாள் ஒன்றுக்கு ரூ.300 சிறப்பு தரிசனம் மூலம் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனம் மூலம் 50 ஆயிரம் பக்தர்களும் வைகுண்ட வாசல் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இலவச தரிசன டிக்கெட் வழங்குவதற்காக திருப்பதியில் இந்திரா மைதானம், ராமச்சந்திர புஷ்கரணி, சீனிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சாமி 2-வது செல்டர், எம்.ஆர். பள்ளி ஜில்லா பரிசத் மேல்நிலைப்பள்ளி, ஜீவகோணா இசட். பி பள்ளி, திருப்பதி மலையில் கவுஸ் துபம் ஓய்வு இல்லம் ஆகிய10 இடங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்படும்.
நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் 10 நாட்களுக்கும் சேர்த்து 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இலவச தரிசன டோக்கன்களை ஆதார் அட்டைகளை சமர்ப்பித்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 56,950 பேர் தரிசனம் செய்தனர். 20,463 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.75 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.