அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min read
Postponement of half-yearly examination; Announcement by Chief Minister M.K.Stalin
10/12/2023
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
எனவே கடந்த 7-ம் தேதி தொடங்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு 11-ந்தேதி நடத்தப்பட இருப்பதாக தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் சென்றுவிட்டது. இதனால் குடியிருப்புகளில் இருக்கும் மக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் 7 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நாளைதான் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மழை வெள்ளத்தில் மாணவர்களின் புத்தகங்கள் சேதமடைந்துள்ளதால் படிக்க சிரமப்படுகின்றனர், எனவே நாளை திங்கட்கிழமை தொடங்க வேண்டிய தேர்வுகள் புதன் கிழமை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் புத்தகங்கள் சேதமடைந்துள்ளதால் புதிய புத்தகங்களை 12-ம் தேதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை தூய்மை படுத்த ரூ.1.90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.