தமிழகம் முழுவதும் 2,300 ஏரிகள் ஆழப்படுத்தப்படும்- தமிழக அரசு தகவல்
1 min read
2,300 lakes will be deepened across Tamil Nadu – Tamil Nadu Govt
தமிழகம் முழுவதும் உலக வங்கி நிதி உதவியுடன் 2,300 ஏரிகள் ஆழப்படுத்தப்பட உள்ளது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை நகரமே வெள்ள நீரில் மூழ்கியது. இதற்கு காணாமல் போன ஏரிகள் தான் என புகார் எழுந்தது. மேலும் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஆழப்படுத்தவும், ஆழ்துளை கிணறுகள் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகம் முழுதும் 2300 ஏரிகள் உலக வங்கி நிதி உதவியுடன் ஆழப்படுத்தப்படும். ஆழப்படுத்தி பழைய நிலைக்கே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த ஜூன் மாத புள்ளிவிவரப்படி 20,150 ஆக்கிரமிப்புகள் அகற்றி 7559 ஏரிகள் மீட்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அற்றவையாக பராமரிக்கப்படுகிறது.
கேரளா ஆந்திரா ஆகிய மாநிலங்களுடன் நீர் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அவை மீறப்படும் பட்சத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க உரிய அமைப்பை நாடி வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.