வெள்ள நிவாரணம்- காங்கிரஸ் கட்சிக்குள் எதிர்ப்பு
1 min read
Flood Relief – Opposition within the Congress Party
17.12.2023
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் ஒரு மாத சம்பளத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கும் முடிவுக்கு, அக்கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு, அக்கட்சியின் எஸ்.சி., துறை தலைவர் ரஞ்சன் குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரின் ஒரு மாத சம்பளத்தை, முதல்வரிடம் கொடுக்க முடிவு செய்துள்ளீர்கள். நல்ல விஷயம் தான். இருந்தாலும், இதில் என் கருத்தையும் பதிவு செய்வது கடமை.
தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நடிகர்களுக்கு மக்களுடன் நேரடி தொடர்பு இல்லை. எனவே, அவர்கள் அரசிடம் நேரடியாக நிவாரண உதவித் தொகையை வழங்குகின்றனர். நம் கட்சிக்கு, தமிழகம் முழுதும் அடித்தள கட்டமைப்பு பலமாக இருக்கிறது.
எனவே, 18 எம்.எல்.ஏ.,க்களின் ஒரு மாத சம்பளத்தை, கட்சியே நேரடியாக மக்களுக்கு நிவாரண உதவிகளாக வழங்குவது தான் சிறந்ததாக இருக்கும். நாமே மக்களை நேரடியாக சந்தித்து கொடுத்தால் தான், நம் கட்சியின் செயல்பாடு மக்களுக்கு தெரிய வரும்.
மாறாக, முதல்வரிடம் தரும் போது, பத்தோடு பதினொன்றாக போகக்கூடும். நாம் நேரடியாக மக்களிடம் வழங்கினால், மக்களுடனான உறவை பலப்படுத்த முடியும்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வழங்கும் நிவாரண தொகையை, நம் கட்சியின் திருவள்ளூர் எம்.பி., வேளச்சேரி எம்.எல்.ஏ., சென்னை மாநகராட்சியில் உள்ள, 15 காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாயிலாக, மக்களுக்கு நேரடியாக வழங்கலாம்.
இது தவிர, மாவட்ட, நகர, வட்டார தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழியாகவும் வழங்கலாம். இந்த யதார்த்த உண்மையை புரிந்து, சரியான முடிவை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.