இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு தவறானது- தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா
1 min read
India Meteorological Department forecast wrong- Chief Secretary Shivdas Meena
19.12.2023
இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு தவறானது என தலைமை செயலாளர். சிவ்தாஸ் மீனா கூறினார்.
தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கணிப்பு தவறானது
கடந்த 17, 18ம் தேதி நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
18ம் தேதி காலை முதல் மதியம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரியாக 11 செ.மீ மழை பெய்துள்ளது. இதேபோல், நெல்லை மாவட்டத்தில் 9 செ.மீ., மழை பெய்துள்ளது.
காயல்பட்டினத்தில் 36 மணி நேரத்தில் 116 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
திருச்செந்தூரில் 92 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பல பகுதிகளில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் பெய்த மழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட கணிப்பு தவறானது. அவர்கள் கூறியிருந்த கணிப்பின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருந்தது. ஆனால், கணிப்பை விட கூடுதல் மழை பெய்தததால் பாதிப்பு அதிகமாகி உள்ளது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 550 வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது.
தூத்துக்குடியில் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு விநியோகிக்கப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மீட்பு பணிகளில் பயிற்சி பெற்ற 100 பேர் களமிறங்கி உள்ளனர். 168 ராணுவ வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு பிரச்சனை நீடிக்கிறது.
தென்மாவட்டங்களில் தண்ணீர் வடிந்த பிறகே போக்குவரத்து சீராகும்.
ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தை ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அடைந்தனர். 300 பேர் ரெயில் ஸ்ரீவைகுண்டம் நிலையத்திலும், 200 பேர் அருகே உள்ள பள்ளி கட்டிடத்திலும் உள்ளனர்.
தென்மாவட்டங்களில் மீட்பு பணியில் 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. மீட்பு பணிக்காக ராமநாதபுரத்தில் இருந்து 50 படகுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து 10 மோட்டார் பம்புகள் அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு தலைமைச் செயலாளர் கூறினார்.