டிரம்ப் போட்டியிட தடை என்றால் விவேக் ராமசாமியும் போட்டியிட மாட்டாராம்
1 min read
If Trump is banned from contesting, Vivek Ramasamy will not contest either
20.12.2023
அமெரிக்காவில் அடுத்த வருடம் நவம்பர் மாத காலகட்டத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden) மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trmup) தீவிரமாக களம் இறங்கி உள்ளார்.
கடந்த 2020ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்படும் நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க சட்டத்தின்படி தேசத்துரோகமாக கருதப்படும் இந்த செயலுக்கு தூண்டுதலாக டிரம்ப் செயல்பட்டதாக அவர் மீது கொலராடோ (Colorado) மாநில நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.
இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து கொலராடோ நீதிமன்றம், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு டிரம்பிற்கு தடை விதித்துள்ளது. அந்நாட்டு தேர்தல் முறைப்படி குடியரசு கட்சியின் “பிரைமரி” (primary) தேர்தல் எனப்படும் முதல்நிலை வாக்குப்பதிவில் டிரம்பின் பெயர் வாக்குச்சீட்டில் இருக்க கூடாது என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் பிற வேட்பாளர்களில் ஒருவரான இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி, “இதை சட்டவிரோதமான நடவடிக்கையாக பார்க்கிறேன். இது அமெரிக்காவில் மோசமான விளைவை ஏற்படுத்தும். டிரம்ப் பெயர் வாக்குச்சீட்டில் இடம் பெறாமல் இருந்தால் நானும் போட்டியிலிருந்து விலகுவேன். இதே போன்று குடியரசு கட்சியின் பிற வேட்பாளர்களும் விலக வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என எக்ஸ் சமூகவலைதளத்தில் தனது அதிகாரபூர்வ கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இது ஒரு புறமிருக்க, தேர்தலில் கொலராடோ ஜனநாயக கட்சிக்கே அதிக சாதகமானது என்பதால் டிரம்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தீர்ப்பும் மேல்முறையீடும் பெரிதாக தேர்தல் முடிவில் மாறுதலை ஏற்படுத்தாது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.