June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடி வெள்ளம்: மத்திய குழு படகில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்தது

1 min read

Tuticorin floods: Central team went by boat to survey the damage

20.12.2023
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18-ந் தேதிகளில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெய்த கனமழையால் தாமிர பரணி ஆற்றில் சுமார் 1 லட்சம் கன அடி நீர் சென்றது.

இதனால் ஆறு மற்றும் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்தது.இதனால் சாலைகள், பாலங்கள் துண்டிக்கப்பட்டு பல்வேறு கிராமங்கள் தனித்தீவாக மாறின.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகர பகுதிகள் முழுவதும் 4-வது நாளாக இன்றும் வெள்ளத்தில் மிதக்கிறது. திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மிதக்கிறது.

மேலும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் நீரில் முழ்கின. இதேபோல நெல்லை மாவட்டத்திலும் கடுமையான வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழு, தமிழ்நாடு அரசு துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு, சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் தென் மாவட்டங்களில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக இன்று காலை மதுரை வந்தடைந்தனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய குழுவினர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

தூத்துக்குடியில் ஸ்டேட் பாங்க் காலனி, முத்தம்மாள் காலனி பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். படகில் சென்று மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் மத்திய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதன் பிறகு டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.