தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு- நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
1 min readOrder to speedily complete inspection and relief works of M.K.Stal in Tuticorin
21.12.2023
துாத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்; நிவாரண உதவிகளையும் வழங்கினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நிவாரண முகாம்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தடைந்தார்.
அங்கிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை ஸ்டாலின் வழங்கினார். ஆய்வு பணியின் போது திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
துாத்துக்குடி மறவன் மடத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களை சந்திக்க வந்த முதல்வர் ஸ்டாலினிடம் கதறி அழுது குறைகளை தெரிவித்தனர்.
பின்னர், ‛‛ மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும். வெள்ள நீரை அகற்ற அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.