அயோத்தி ராமரை இலவசமாக தரிசிக்க 275 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு
1 min read
Decision to run 275 special trains to visit Lord Rama in Ayodhya for free
26.12.2023
உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கருதியும் நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்கள் இவ்விழாவுக்கு வர வேண்டாம் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனால், திறப்பு விழா முடிந்த பிறகு பொதுமக்கள் ராமரை தரிசிப்பதற்கான ஏற்பாட்டை பா.ஜ.க. செய்கிறது. இந்த இலவச ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் பீகார் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதிலும் இருந்து 5 கோடி பேர் அயோத்தி ராமர் கோவிலில் இலவசமாக தரிசனம் செய்ய பா.ஜ.க. ஏற்பாடு செய்து உள்ளது. இதற்காக, ‘ராம் தர்ஷன் அபியான்’ எனும் பெயரில் ஜனவரி 24-ல் தொடங்கும் ஆன்மிக யாத்திரை மார்ச் 24 வரை நடைபெற உள்ளது.
இதற்காக, ரெயில்வே துறையில் நாடு முழுவதிலும் இருந்து 275 சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதில், உணவு உள்ளிட்ட சகல வசதிகளுடன் 5 கோடி பேரும் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் மூலம், ராமர் தரிசனத்துடன், அயோத்தியின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றி நாட்டு மக்களை அறிய வைப்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம்.
வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கம்-2 நிகழ்ச்சிக்கும், தமிழ் நாட்டில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பயணம், தங்குதல், உணவு என அனைத்து வசதிகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் செய்தது போல், அயோத்தி பயண ஏற்பாட்டை பா.ஜ.க. செய்ய உள்ளது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக உ.பி. அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இவ்விழா, இந்திய வரலாற்றில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக அமையும் வகையில் மிகமிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.