செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில் 900 பேர் குற்றவாளிகள்’-மத்திய குற்றப் பிரிவு போலீஸ் தகவல்
1 min read
Senthil Balaji case did not receive permission from the government – police information
3.1.2024
3.1.2024
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி செய்த வழக்கின் கூடுதல் குற்றப் பத்திரிகையில் அதிகாரிகள், ஊழியர்கள் என சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றத்தில், மத்திய குற்றப் பிரிவு காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011 முதல் 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2017-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, விசாரணை நடத்திய மத்திய குற்றப் பிரிவு காவல் துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என மீண்டும் தெரிவித்தார்.
அப்போது, குற்றவாளியாக சேர்க்கப்பட சில போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் வழக்கறிஞர் ஆஜரான ஜார்ஜ் வில்லியம்ஸ் தங்களை தேவையின்றி வழக்கில் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, கூடுதல் குற்றபத்திரிக்கையில் சுமார் 900 பேர் வரை சேர்த்துள்ளனர். எனவே, அனைவருக்கும் விசாரணை அனுமதி கிடைத்தவுடன்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்க முடியும் எனக் கூறி, விசாரணை பிப்ரவரி 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.