தென்காசி மாவட்டத்தில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு ஓராண்டு பட்டயப்படிப்பு
1 min read
One Year Certificate Course for Agricultural Input Dealers in Tenkasi District
4.1.2024
தென்காசி மாவட்டத்தில் வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு ஓராண்டு பட்டயப்படிப்பு நடைபெறவுள்ளது.
இதுபற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்கப் பயிற்சி நிலையம் , ஹைதராபாத் 2003-ம் ஆண்டிலிருந்து வேளாண் இடுபொருட்கள் பற்றிய அடிப்படை அறிவை இடுபொருள் விற்பனையாளர்களுக்கு அளிக்கும் வகையில் வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப்படிப்பினை நடத்தி வருகிறது.
வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர். பெரும்பாலான வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் சார்ந்த முறையான கல்வியினைப் பெற்றிருப்பதில்லை.
தற்போது மாறி வரும் தட்ப வெப்ப சூழ்நிலைகளால் புதுவிதமான பூச்சி மற்றும் நோய்கள் பயிர்களை தாக்குகின்றன. எனவே வேளாண்மையில் அவர்களது தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதற்கும், விவசாயிகளுக்கு நல்ல முறையில் பயன்பெறும் வகையிலும், தேவையை அறிந்து தேவையான இடுபொருட்களை சரியான தருணங்களில் விவசாயிகளுக்கு வழங்கி வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கு துணையாக விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர்களாக செயல் புரியவும் மேற்கண்ட ஓராண்டு பட்டயப் படிப்பினை ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்கப் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகின்றது.
இந்த படிப்பு, மாநில வேளாண்மை மேலாண்மை மற்றும் விரிவாக்கப் பயிற்சி நிலையம்(சமிதி) மூலம் வேளாண்மை ஆணையர், சென்னை அவர்களால் தேர்வு செய்யப்பட்ட இணைப்பு பயிற்சி நிலையங்கள் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திட்ட இயக்குநர் (அட்மா)-வும் இணைப்பு பயிற்சி நிலையங்களாக வேளாண்மை ஆணையர், சென்னை அவர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்தப் படிப்பு சுயநிதி மூலமாகவும் மத்திய அரசின் 50 சதவீத மானிய நிதியுடனும் நடத்தப்பட்டு வருகின்றது. குறைந்தப்பட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். தேர்ச்சி பெறுவது அவசியம் இல்லை.
சுயநிதி முறையில் படிப்பதாக இருந்தால் ரூ.20,000/-ம், மத்திய அரசின் 50 சதவீத மானிய நிதி மூலமாக பயில்வதாக இருந்தால் ரூ.10,000/-ம், வேளாண் விற்பனை நிறுவனங்கள் மூலமாக படிப்பதாக இருந்தால் அந்நிறுவனம் ரூ.10,000/-ம், மீதமுள்ள ரூ.10,000/- மத்திய அரசு மற்றும் இடுபொருள் விற்பனையாளரும் தலா ரூ.5,000/- வீதம் படிப்புத் தொகையாக கட்ட வேண்டும்.
இந்தப் படிப்பு, வாராந்திர வகுப்புகளாக, அதாவது வாரந்தோறும் சனி (அ) ஞாயிறு (அ) விற்பனை விடுமுறை நாளன்று பெரும்பாலும் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படும். அணிக்கு கட்டாயம் 40 நபர்கள் இருக்க வேண்டும். மொத்தம் 48 நாட்களில் 40 நாட்கள் வகுப்பறை வகுப்புகளும்), 8 நாட்கள் கண்டுணர்வு வகுப்புகளும் நடத்தப்படும்.
இந்த படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் வேளாண்மை இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் (அட்மா) அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதலில் வரும் 40 நபர்களுக்கு தென்காசி மாவட்டத்திலேயே இந்த பட்டயப் படிப்பினை நடத்திட ஆவன செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள வேளார் இடுபொருள் விற்பனையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெற வேண்டும்
இவ்வாறு ஆட்சித்தலைவர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.