தென்காசி: ஊராட்சி மன்ற தலைவர்கள் சுயமாக செயல்பட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உறுதிப்படுத்த வலியுறுத்தல்
1 min read
Tenkasi District Municipal Council Presidents Federation meeting
13.1.2024
தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 221 ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதி அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின்
கூட்டமைப்பின் தலைவர் தென்காசி கோவிந்தப்பேரி டி.கே.பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின்
ஒருங்கிணைப்பாளர்
பெரியபிள்ளை வலசை பொறியாளர் க.இ.வேலுச்சாமி,
செயலாளர் மடத்துப்பட்டி செய்யது இப்ராகிம், வீரபாண்டியன், அழகுதுரை, பொருளாளர் அன்புராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதலில் தென்காசி மாவட்டத்தில் மறைந்த இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தென் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் தமிழக அரசு சிறப்பு நிதியாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
புயல் வெள்ள பாதிப்பு களால், தென் மாவட்டங்கள் மிகவும் பாதிப்படைந்து இருப்பதால் பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்.
ஊராட்சி கணக்கு எண் 2-ல் உள்ள உபரி நிதியை, கணக்கு எண் 1-ல் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி, ஊராட்சி மன்றங்களில் இயற்றப்படும் தீர்மானங்கள் அடிப்படையில் ரூ.5 லட்சம் வரை பணிகள் மற்றும் செலவுகள் செய்து கொள்ளலாம் என்ற அரசு ஆணையை உறுதி செய்ய வேண்டும்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் சுயமாக செயல்பட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை உறுதிப்படுத்த வேண்டும், மாவட்ட ஆட்சித் தலைவர் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களையும் அழைத்து இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்த வேண்டும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் குறித்த தகவலை அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் திங்கட்கிழமை மனுநீதி நாளில் மனுவாக அளிக்கவும் முடிவு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் திரளாகக் கலந்து கொண்டார். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பின்
பொருளாளர் அன்பு ராணி நன்றி கூறினார்.