June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தி.மு.க. எதிர்ப்பு: உயர்நிலை குழுவுக்கு விளக்க கடிதம்

1 min read

DMK for one country one election. Objection: Explanatory letter to High Level Committee

17.1.2024
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து உயர்நிலைக் குழுவிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
‛ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு’ ஏற்கனவே திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2022ல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் பார்லிமென்ட் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது சம்பந்தமாகத்தான் ஆலோசனைகளைக் கோரியது.
ஆனால் தற்போது மத்திய அரசு இதை விரிவுபடுத்தி அதனுடன் சேர்த்து நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்த செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், ஜனாதிபதி முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு, துவக்கத்தில் இருந்தே சட்ட விரோதமானதும் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதும் ஆகும். பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இது அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ‛சுதந்திரமான, நேர்மையான’ தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது; விரோதமானது.
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டசபைகளை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் திமுக இதனை எதிர்க்கிறது. மத்திய ஆளும்கட்சியும் மெஜாரிட்டியை இழந்தால், ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதை கூட ஆலோசிக்காமல் இந்த முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.
மத்திய – மாநில உறவு அடங்கிய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. ஜனநாயக நடைமுறையை பலவீனப்படுத்துவதாகும். ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது. உள்ளாட்சி தேர்தல், சட்டசபை, பாராளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடக்க முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரே நேரத்தில் தேர்தலை எதிர்கொள்ள தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட 3 முதல் 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதால், கட்டுக்கடங்காத செலவினத்தை ஏற்படுத்தும். ஒரே நேரத்தில் நகராட்சி, பஞ்சாயத்து, சட்டசபை, பாராளுமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் போதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்களும் இல்லை. இதற்கே பல லட்சம் கோடி ரூபாயை செலவிட வேண்டிய நிதி சுமை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும் என்பதால் இந்த தேர்தல் நடைமுறையால் நிதி சிக்கனம் ஏற்படாது.
இது மத்திய – மாநில அரசு உறவுகளில் மட்டுமல்ல மத்திய அரசிற்கே கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் ஆபத்துமிக்க முயற்சி. இதுபோன்ற தேர்தல் நடைமுறை பற்றிய முடிவினை உயர்நிலைக்குழு விளையாட்டாக எடுத்து அதிகார பசியுடன் இருக்கும் மத்திய பா.ஜ.க., அரசை திருப்திப்படுத்த நினைக்க கூடாது.

மேற்கண்ட காரணங்களுக்காக ‛ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை திமுக மிக கடுமையாக எதிர்க்கிறது. எனவே உயர்நிலைக்குழு இது தொடர்பான தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் திமுக சட்டத்தின் வழி கொண்டு பொருத்தமான நடவடிக்கையை எடுக்க தள்ளப்படும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.