மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு
1 min read
Order to vacate Mahua Moitra Government Bungalow
7.1.2024
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. யாக இருந்த மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை 2023 நவம்பர் 9 அன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
இப்பரிந்துரையை ஏற்ற மக்களவை, மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
எம்.பி., பதவியில் இருந்து மஹுவா நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசு எஸ்டேட் இயக்குனரகம் கேட்டுக்கொண்டது.
மஹூவா மொய்த்ரா, தனது பங்களாவை காலி செய்யாத நிலையில், இது குறித்து மூன்று நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு எஸ்டேட் இயக்குனரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், அரசு பங்களாவை காலி செய்யுமாறு தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மஹுவா மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், “விதிவிலக்கான சூழ்நிலைகளில் சில சிறப்புக் கட்டணங்கள் பெற்றுக்கொண்டு 6 மாதங்களுக்கு பங்களாவில் உறுப்பினர்கள் தங்க, விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் மஹுவாவின் கோரிக்கை மீது எஸ்டேட் இயக்குனரகம் சொந்தமாக முடிவு எடுக்கலாம். குடியிருப்பவர்களை காலி செய்ய கூறும் முன்பு, அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது. இவ்விவகாரத்தில் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் தனது மனுவை திரும்பப் பெற மஹுவாவிற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.