குலசேகரப்பட்டி ஊராட்சி தலைவர் மீது பரபரப்பு புகார்-23ந் தேதி கருத்துக் கேட்பு
1 min read
A sensational complaint against the president of Kulasekharapatti panchayat
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் குலசேகரபட்டி ஊராட்சி மன்றத்தலைவர் மீதான முறைகேடு புகார் குறித்து தென்காசி வட்டாட்சியர் சுப்பையன் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் 23.01.2024 அன்று நடைபெறு உள்ளது.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் முத்துமாலையம்மாள் இவரது கணவர் மதிச்செல்வன் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், ஊராட்சி மன்ற நிதியை கையாள்வதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகவும் பல லட்சம் ரூபாய் அரசு நிதி கையாடல்
செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி குலசேகரபட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 9 பேர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு ஆகியோரிடம் எழுத்துப் பூர்வமாக புகார் மனு கொடுத்துள்ளனர்
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் தணிக்கை மூலம் குலசேகரபட்டி ஊராட்சியில் ஆய்வு செய்து மேற்கண்ட புகார் மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் தணிக்கை குலசேகரப்பட்டி ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது உண்மை என்றும் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவினர் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்களும் ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி பற்றியும், மேலும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும் ஊரக வளர்ச்சி துறை இயக்குநர் தணிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்பிக்கப்பட்டதின் விளைவாக ஊராட்சிகள் சட்டம் 205 1 ஏ யின் கீழ் (உங்களை ஏன் பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று) மாவட்ட ஆட்சியரால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்கு பஞ்சாயத்து தலைவரால் கொடுக்கப்பட்ட விளக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக்கொள்ளாத நிலையில், இந்த வழக்கின் அடுத்த நிலையான ஊராட்சி உறுப்பினர்களின் கருத்து அறியும் கருத்து கேட்பு கூட்டம் 23.01.2024 காலை 11-மணிக்கு குறும்பலாப்பேரி பகுதியில் உள்ள குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து தென்காசி வட்டாட்சியர் சுப்பையன் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூறும் கருத்தை அறிந்து ஊராட்சி மன்றத் தலைவர் மீது மேல் நடவடிக்கை இருக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே மொத்தம் உள்ள 15 – ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் முறைகேடுகள் செய்த தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு அளித்துள்ளனர். எனவே இவர்கள் 9 பேரும் தலைவருக்கு எதிராக இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் குலசேகப்பட்டி பஞ்சாயத்து தலைவர் முத்துமாலையம்மாள் பதவிக்கு சிக்கல் ஏற்படும் என்று பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.