ஆவுடையானூர் ஊராட்சி தலைவருக்கு ஆதரவாக அதிமுக முற்றுகை
1 min read
Complaint against Audhaiyanur panchayat president- AIADMK blockade
20.1.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் மீதான பல்வேறு முறைகேடுகள் பற்றிய புகார் குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்து கேட்பு கூட்டம் தென்காசி தாசில்தார் தலைமையில் நடைபெற்றது. அப்போது அதிமுக நிர்வாகிகள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபி. இவர்மீது ஊராட்சி மன்ற நிதியை கையாள்வதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக வந்த புகாரின் பேரில், ஊராட்சி உறுப்பினர்களின் கருத்து அறியும் கூட்டம் தென்காசி தாசில்தார் சுப்பையன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் எழுத்து மூலம் கருத்துக்கள் பெறப்பட்டது . இது குறித்து தென்காசி தாசில்தார் சுப்பையனிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் எழுத்து மூலம் பெறப்பட்டது.
இவை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் இதற்கான முடிவை மாவட்ட ஆட்சியர் எடுப்பார் என்றும் கூறினார்.
இந்த நிலையில் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் என்ற கோபி அதிமுகவை சேர்ந்தவர் என்பதால் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில்
அதிமுகவை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆவுடையானூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் தென்காசி
ஏடிஎஸ்பி ரமேஷ், ஆலங்குளம் டிஎஸ்பி
பர்னபாஸ், பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.