ஆற்றில் கார் கவிழ்ந்ததில் சைதை துரைசாமியின் மகன் மாயம்
1 min read
Saidai Duraisamy’s son is missing after his car overturned in the river
5.2.2024சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி துரைசாமி. இதனிடையே, வெற்றி துரைசாமி திருப்பூரை சேர்ந்த கோபிநாத் என்பவருடன் இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இமாச்சலபிரதேசத்தின் சட்லஜ் ஆற்றின் அருகே மலைப்பாங்கான பகுதியில் வெற்றி துரைசாமி தனது நண்பருடன் நேற்று காரில் சென்றுள்ளார். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் கார் டிரைவர் பலியானார். காரில் பயணித்த கோபிநாத் என்பவர் காயங்களுடன் மீட்கப்பட்டார். ஆனால், வெற்றி துரைசாமி மாயமானார். கார் ஆற்றுக்குள் கவிழ்ந்தபோது வெற்றி துரைசாமி ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த கோபிநாத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த கார் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமான வெற்றி துரைசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.