தென்காசி மாவட்டத்தில் இன்றைய கிரைம் செய்திகள்
1 min read
Today’s Crime News in Tenkasi District
6.2.2024
தென்காசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற குற்ற சம்பவங்களும் அதன் மீது மாவட்ட காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகளை காணலாம்.
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் செல்போன் திருடிய நபர் சிறையில் அடைப்பு
இராஜபாளையத்தை சேர்ந்த ரூபன் ஜெயராஜ் என்ற நபர் கேரளாவில் டெய்லர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரூபன் ஜெயராஜ் 14.02.2024 அன்று அதிகாலை 3 மணி அளவில் கேரளா மாநிலத்திற்கு செல்ல பேருந்துக்காக காத்து கொண்டிருந்த போது பேருந்து நிலையத்தில் தூங்கியுள்ளார்.
இதை நோட்டமிட்ட சரவணன் என்ற நபர் தூங்கிக் கொண்டிருந்த ரூபன் ஜெயராஜின் பாக்கெட்டில் இருந்து 300 ரூபாய் பணம் மற்றும் செல்போனை திருட முயற்சி செய்துள்ளார் இதை பார்த்த ரூபன் ஜெயராஜ் சத்தம் போட்டதும் அருகில் இருந்த நபர்கள் சரவணனை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ரூபன் ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் கல்யாணசுந்தரம் விசாரணை மேற்கொண்டு மேற்படி செல்போன் திருட்டில் ஈடுபட்ட சின்ன கோவிலாங்குளம், முத்துகிருஷ்ணாபுரம், இந்திரா காலனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சரவணன் (வயது 45) என்ற நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தார். மேலும் திருடப்பட்ட பணம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
………………………………………….
தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் சுரேஷ் கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சங்கரன்கோவில் வடகாசி அம்மன் கோவில் இரண்டாம் தெருவை சேர்ந்த ஆவுடையப்பன் என்பவரின் மகன் சிவசங்கர் (வயது 52) என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 9.750/- மதிப்பிலான 237 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 500/- பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
………………………………………
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் இன்று தென்காசி மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 14 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர்.