மணல் குவாரி விவகாரத்தில் கலெக்டர்களுக்கு சம்மன்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
1 min read
Summons to Collectors in Sand Quarry Issue: Supreme Court Barrages Questions to Tamil Nadu Govt
23/2/2024
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது.
இந்த சோதனையைத் தொடா்ந்து, 10 மாவட்ட கலெக்டர்கள், நீா்வளத்துறை முதன்மைப் பொறியாளா் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறைப் பொறியாளா் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக தமிழக அரசின் பொதுப் பணித்துறைச் செயலா், நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலா், திருச்சி, தஞ்சாவூா், கரூா், அரியலூா் மற்றும் வேலூா் என 5 மாவட்ட கலெக்டர்கள் சாா்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. விசாரணை முடிவில் அமலாக்கத்துறை சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு தொடர்பாக இன்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்?. அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என கேள்விகளை எழுப்பினர்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.