பிரதமர் மோடி பங்கேற்கும் பா.ஜ., மாநாடு சரித்திரத்தில் இடம் பெறும்: அண்ணாமலை பேட்டி
1 min read
BJP conference to be attended by PM Modi will go down in history: Annamalai
24.2.2024
”பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பா.ஜ.க., மாநாடு, சரித்திரத்தில் இடம்பெறக்கூடியதாக அமையும்” என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில் வரும் 27ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பா.ஜ., பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்த பின், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஆகியன பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளன. இதுவரை இதுபோன்ற ஒரு கூட்டம் நடந்திருக்காது என்பதற்கு சான்றாக இது அமையும். மிகப்பெரிய எழுச்சி விழாவாக இருக்கும்.
தமிழகத்தின் அரசியல் மாற்றங்களில் மிக முக்கியமானதாக ‘என் மண்; என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழா அமைய உள்ளது.
கடந்த 1947க்கு பின் எத்தனையோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இந்த மாநாடு மூலம் ஏற்படும் மாற்றம் மிக முக்கியமானதாக கருதப்படும்.
திருப்பூர் தொகுதியில் தான் யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும் என நிர்வாகிகள் தொண்டர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். யாத்திரையை எங்கு முடிக்கிறோமோ அங்குதான் பிரதமரை அழைத்து வர முடியும் என்பதால் பல்லடம் தேர்வு செய்யப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பிரதமர் வந்து சென்றுள்ளார். கோவை லோக்சபா தொகுதிக்கும் பா.ஜ.க.வுக்கும் நெருங்கிய ரத்த பந்தம் உள்ளது. விருப்பத்தை தந்திருக்கக் கூடிய பொதுக்கூட்டங்கள், திருப்பூர், கோவையில்தான் கடந்த காலத்தில் நடந்துள்ளன. இந்த விழா வெற்றி பெற நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் கடுமையான உழைப்பினை அளித்து வருகின்றனர். மொத்தத்தில், பல்லடத்தில் நடைபெற உள்ள இந்த மாநாடு சரித்திரத்தில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.