மதுரை ரயில்வே கோட்ட காலியிடங்களுக்கு திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி. தேர்வு நடத்துவதா?
1 min read
Thiruvananthapuram RRB for Madurai Railway Division Vacancies. Conduct an exam?
24.2.2024
தெற்கு ரயில்வேயில் மதுரைக் கோட்டத்தில் ஏற்படும் காலிப்பணியிடங்களை இதுவரை ரயில்வே தேர்வு வாரியம் சென்னை (ஆர்.ஆர்.பி.,) மூலம் நிரப்பப்பட்ட நிலையில் முதல் முறையாக திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி.,க்கு மாற்றப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம் கோட்டங்கள்,கேரளாவின் திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்கள் உள்ளன. இதுவரை ரயில்வே காலிப்பணியிடங்களை சென்னை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட கோட்டங்களுக்கு சென்னை ஆர்.ஆர்.பி., மூலமும், திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களில் ஏற்படும் காலியிடங்களை திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி.,யும் நிரப்புவது வழக்கம்.
தற்போது தெற்கு ரயில்வேயில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு மதுரை கோட்டத்தில் காலியாக உள்ள 750 பணியிடங்கள் திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி., மூலம் நிரப்பப்படும் என ரயில்வே அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது: ரயில்வேயில் ஏற்படும் பணியிடங்களை நிரப்புவதில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் தான் இதுவரை தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.
தமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் ஏற்கனவே வெளி மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் அதிகம் பேர் பணியில் உள்ளனர். அவசர காலத்தில் மொழிப் பிரச்னை பெரும் சவாலாக உள்ளது.
தமிழக உரிமையை பாதிக்கும் வகையில் மதுரைக் கோட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப திருவனந்தபுரம் ஆர்.ஆர்.பி.,க்கு தாரைவார்த்திருப்பது தமிழர்களின் எதிர்காலம் குறிப்பாக மதுரை கோட்ட காலிப்பணியிடங்களில் நம்மவர்கள் சேருவது கேள்விக்குறியாகியுள்ளது என்றனர்.