அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி எடுத்துச் செல்ல தடை இல்லை: அமைச்சர் சிவசங்கர்
1 min read
There is no ban on carrying beef in government buses: Minister Sivashankar
24.2.2024
மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.