பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்: தமிழக அரசு அறிவிப்பு
1 min read
Ponmudi is MLA again. Anar: Tamil Nadu Govt Notification
13.3.2024
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் மீண்டும், பொன்முடி எம்.எல்.ஏ.,வாக தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போதைய திமுக அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவர் கடந்த 2006- 2011ம் ஆண்டில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக 2011ல் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்தது.
இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகிய இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனால் பொன்முடி தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்தார்.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தார். அப்போது, இவ்வழக்கில் சரண் அடைவதில் இருந்து பொன்முடிக்கு உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது. இதையடுத்து பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு அளித்ததை நிறுத்தி வைக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், பொன்முடி வழக்கின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்ற உத்தரவு நகல் தமிழக அரசுக்கு கிடைத்துள்ளது. மீண்டும், பொன்முடி எம்.எல்.ஏ.வாக தொடர்வார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது. பொன்முடியை அமைச்சராக நாளைக்குள் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி கவர்னருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.