ரேஷன் அரிசி கடத்தல்-கேரள இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
Smuggling of Ration Rice-Arrested in Kerala Youth Gangster Act
17.3.2024
தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்திய கேரள இளைஞரை தமிழக போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
தமிழக கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் நேற்று குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் ரமேஷ் ராஜா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்திற்கு சென்ற ஒரு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வேனில் 4000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக அந்த வேனை பறிமுதல் செய்த அதிகாரிகள் வேனில் இருந்த கோவில்பட்டி பெரிய மார்க்கெட் செக்கடி தெருவை சேர்ந்த கலைச்செல்வம் என்பவரது மகன் பட்டு ராஜன் என்பவரையும் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின் கரை இடிசக்க பிலாமூடு பகுதியைச் சார்ந்த ஜமாலுதீன் என்பவரது மகன் அன்வர் என்ற அன்வர் கான் (வயது 34) நெல்லை அருகே உள்ள பகுதியைச் சார்ந்த மகாராஜன், நெல்லை கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி ஆகியோர் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு கொடுத்துள்ளது தெரியவந்தது.
உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் கேரள மாநிலத்தை சேர்ந்த அன்வர்கானை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை மதுரை மண்டல எஸ்பி விஜய கார்த்திக் ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து
தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா அன்வர்கானை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார் மேலும் அவருக்கு சொந்தமான ரேஷன் அரிசி குடோனை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
கைது செய்யப்பட்ட அன்வர்கான் மீது கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராசாலா காவல் நிலையத்தில் இவரது பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. இவர் மீது கேரள மாநிலத்தில் 8 குற்ற வழக்குகளும், தமிழகத்தில் குழித்துறை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் மூன்று வழக்குகளும் நெல்லை தென்காசி மற்றும் தூத்துக்குடியில் தலா ஒரு வழக்குகளும் நிலவையில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து அன்வர்கானை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டி குடிமை பொருள் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜி ஜோசி நிர்மல் குமார் மதுரை மண்டல எஸ் பி விஜய கார்த்திக் ராஜா மற்றும் நெல்லை டிஎஸ்பி ராமகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா ஆகியோர் தென்காசி மாவட்ட கலெக்டர் ஏ கே கமல் கிஷோரிடம் பரிந்துரைத்தனர்.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுப்படி அன்வர்கானை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். வெளிமாநிலத்தைச் சார்ந்த ஒருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் முதன்முறையாக தமிழக போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த இரண்டு மாதங்களில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் நெல்லை சரகத்தில் ஆறு நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.