நீலகிரியில் பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட்
1 min read
Nilgiri Flying Squad female officer suspended
30.3.2024
நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா போட்டியிடுகிறார். ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, கடந்த 25-ந்தேதி முதல் முறையாக நீலகிரிக்கு சென்றார். செல்லும் வழியில், கோத்தகிரியில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நீலகிரியை நோக்கி அவர் சென்று கொண்டிருந்தபோது, அவரது காரை பறக்கும் படை அதிகாரி கீதா தலைமையிலான குழு சோதனை செய்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும், ஆ.ராசாவின் வாகனத்தை, பறக்கும் படை அதிகாரி முறையாக சோதனை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நீலகிரி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருணா இது தொடர்பாக விளக்கம் கேட்டு பறக்கும் படை அதிகாரி கீதாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். மேலும் விசாரணைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பான விசாரணையானது இன்று நடைபெற்றது. விசாரணை முடிவில், தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பறக்கும் படை அதிகாரி கீதாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.