தென்காசியில் பறக்கும் படை அதிரடி – பைக்கில் வந்தவரிடம் ரூ.90,000 பறிமுதல்
1 min read
Flying Squad action in Tenkasi – Rs 90,000 seized from bike rider
3.4.2024
தென்காசி பகுதியில் கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் பா.கண்ணன் தலைமையில் செயல்பட்டு வரும் பறக்கும் படையினர் நேற்று காலையில் குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது பைக்கில் வந்த நபர் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூபாய் 90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
தென்காசி பகுதியில் கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பா.கண்ணன் தலைமையில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, தலைமை காவலர் முருகேசன், மற்றும் காவலர்கள் பிரதாப் அயன்ராஜ் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் தென்காசி பகுதிகளில் செல்லும் வாகனங்களை வழிமறித்து அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று காலை 09.30 மணியளவில் தென்காசி குற்றாலம் சாலையில் நன்னகரம் பகுதியில் சோதனை நடத்திய போது அந்த வழியாக சென்ற ஒரு பைக்கை வழிமறித்து சோதனை செய்தனர.
அப்போது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 89,075 ரூபாய் இருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த நபர் குத்துக்கல்வலசை பகுதியைச் சார்ந்த வி.சிவா என்பது தெரிய வந்தது. ஆனால் தேர்தல் விதிமுறைகளின் படி அந்தப் பணத்துக்குரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரி பா.கண்ணன் பறிமுதல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 89,075 ஐ தென்காசி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தாசில்தார் ஹமிதாள் இடம் முறைப்படி ஒப்படைத்தார்.