ஆபாசமாக பேசிய நிருபர்: மன்னிப்பு கேட்க அண்ணாமலை வலியுறுத்தல்
1 min read
Reporter who spoke obscenely: Annamalai urged to apologize
7.4.2024
தனியார் பத்திரிகை நிருபர் ஒருவர், பா.ஜ., தொண்டரை ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘அந்நிருபர் தொண்டரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனக் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதியில் அண்ணாமலை நேற்று (ஏப்,8) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டபோது, தனியார் பத்திரிகை நிருபர் ஒருவர் பா.ஜ., தொண்டர் ஒருவரை கெட்ட வார்த்தையால் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அண்ணாமலை நிருபர்கள் சந்திப்பை புறக்கணித்தார்.
மேலும் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ”தாயை இழிவுப்படுத்தும் வகையிலான அந்த கெட்ட வார்த்தையை கூறியதற்காக குறிப்பிட்ட நபர் எங்கள் தொண்டரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட மன்னிப்பு கேட்கவில்லை எனில், பல்லடம் போலீசில் நானே புகார் அளிப்பேன். மன்னிப்பு கேட்கும் வரை நிருபர்களிடம் பேட்டி அளிக்க மாட்டேன்” எனக் கூறி புறக்கணித்து சென்றார்.
முன்னதாக பிரசாரத்திற்கு செல்லும்போது அண்ணாமலையின் பிரசார வாகனத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செய்தியாளர்கள் தங்கள் வாகனங்களில் வருவதாக கூறி, அண்ணாமலை கோபமடைந்தார். அப்போது, ”மக்கள் ஓட்டு போடுகிறார்கள்.. நான் மக்களை பார்க்கிறேன். நீங்க உங்க டிவியில் போட்டுதான் நான் ஜெயிக்கணும்னு கிடையாது, புரிஞ்சுக்கோங்க” எனக் கூறிவிட்டு அண்ணாமலை தனது வாகனத்தில் ஏறி சென்றார்.
நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சதி வலை!
கோவையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 4 சர்வதேச விளையாட்டு மைதானம் தேவை. விளையாட்டு மைதானம் தேவை தான், ஆனால் முதலில் சாலையை சீரமைக்க வேண்டும். பிரதமர் மோடி மேட்டுப்பாளையத்தில் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
கோவையில் தி.மு.க., தங்கச்சுரங்கத்தையே கொட்டினாலும் பா.ஜ.க, தான் வெற்றி பெறும். நயினார் நாகேந்திரனுக்கு எதிரான சதி வலையில் அவர் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.
தி.மு.க.வினர்தான் உண்மையான திருடர்கள். பணத்தை பற்றி பேசுவதற்கு தார்மீக உரிமை ஒரு கட்சிக்கு இல்லையென்றால் அது திராவிட முன்னேற்ற கழகம்தான். தி.மு.க. ஒரு கார்ப்பரேட் கம்பெனி.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். அவர் சுயநினைவோடு தான் பேசுகிறாரா? தலைநகரை எப்படி நாக்பூருக்கு மாற்ற முடியும்?. கமல் மனநல மருத்துவரை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.