ஜெயக்குமார் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாறுகிறதா? போலீஸ் சூப்பிரண்டு `திடீர்’ ஆய்வு
1 min readJayakumar murder case transferred to CPCID? Superintendent of Police “sudden” inspection
9.5.2024
நெல்லை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் அருகே அமைந்துள்ள மாவட்ட சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள், வருகை பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள போலீசாருக்கு விசாரணையை துரிதப்படுத்துதல், விசாரணையை கையாளும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த ஆய்வின் போது சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் நவ்ரோஜ், சிவக்குமார், இன்ஸ்பெக்டர் உலக ராணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சூரியன், முனியாண்டி, கார்த்திகா செல்வி ஆகியோர் இருந்தனர். முன்னதாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வந்த எஸ்.பி. முத்தரசிக்கு போலீசார் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு திடீர் வருகையால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 4-ந் தேதி நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கில் இதுவரை துப்பு துலங்காமல் இருந்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி வருகையினால் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 2-ந் தேதி திசையன்விளை பஜாரில் உள்ள ஒரு கடையில் இரவு 10.10 மணி அளவில் ஜெயக்குமார் சாதாரணமாக சிரித்து பேசிக் கொண்டிருப்பதும், அந்த கடையில் அவர் ஒரு டார்ச் லைட் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு புறப்படும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அவர் இறப்பில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக பல்வேறு தடயங்கள் சிக்கியுள்ள நிலையில் மேலும் சில தடயங்கள் சிக்கலாம் என்ற அடிப்படையில் இன்று 4-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் அவரது வீடு மற்றும் தோட்டத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரையிலும் நடைபெற்ற ஆய்வில், 2-ந் தேதி இரவு திசையன்விளை பஜாரில் உள்ள கடையில் ஜெயக்குமார் வாங்கிய டார்ச் லைட் அவரது வீட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.