தலித்துகளின் இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் வழங்க அனுமதிக்க மாட்டேன்- பிரதமர் மோடி உறுதி
1 min read
I will not allow reservation of Dalits on the basis of religion – Prime Minister Modi assured
10.5.2024
பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பாரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
என்னைப் பொறுத்தவரை, பழங்குடியினருக்கு சேவை செய்வது எனது குடும்பத்திற்கு சேவை செய்வது போன்றதாகும். ஆதிவாசிகளின் நலன் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்படவில்லை.
மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் முதுகில் குத்துவது போன்றதாகும். இது அளவிட முடியாத பாவம். இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது காங்கிரஸ் பொய்களைப் பரப்புகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஒரே இரவில் அனைத்து முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது.
உங்களது ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்குவதே காங்கிரஸின் மறைக்கப்பட்ட செயல்திட்டம். நான் உயிருடன் இருக்கும் வரை தலித்துகள், ஆதிவாசிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க அனுமதிக்க மாட்டேன்.
மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகள், கொள்கைகளுக்கு எதிரானது. கடந்த 17 நாட்களாக காங்கிரசுக்கு நான் சவால் விடுத்து வருகிறேன். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி இடஒதுக்கீட்டை துண்டு துண்டாக வெட்டி முஸ்லிம்களுக்கு ஒரு துண்டாக கொடுக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாகத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.
ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை. நான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கு காவலன். மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் போது, உங்கள் உரிமைகளை பறிக்க முடியுமா?
வளர்ச்சியில் மோடியுடன் போட்டியிட முடியாது என்பது காங்கிரசுக்கு தெரியும். எனவே இந்த தேர்தலில் பொய்களின் தொழிற்சாலையை அவர்கள் திறந்துள்ளனர். இந்து நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதியில் ஈடுபட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவது இந்தியாவின் கருத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் இளவரசரின் (ராகுல்காந்தி) குரு சாம் பிட்ரோடா அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.
போலி சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்னை உயிருடன் புதைக்கப் பேசுகிறார்கள். இது காங்கிரசுடன் இணைவதற்கு போலி தேசியவாத காங்கிரசும், சிவசேனாவும் முடிவெடுத்திருப்பதற்கான அறிகுறி ஆகும்.
இவ்வாறு மோடி பேசினார்.