செங்கல்பட்டு அருகே இருவேறு விபத்து: 9 பேர் பலி
1 min read
Two separate accidents near Chengalpattu: 9 killed
15.5.2024
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இருவேறு விபத்துகளில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி அழகிரி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ், சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), யுவராஜ் மற்றும் மற்றொருவர் என மொத்தம் 5 பேர் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை காரில் சென்றுவிட்டு திரும்பி சென்னை வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த கார் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்த போது மாடு குறுக்கே வந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி கார் நொறுங்கியது.
இதில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை மற்றும் விக்னேஷ் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை கண்ட வாயலூர் பகுதி மக்கள் காரில் சிக்கிக் கொண்டிருந்த மேலும் இருவரை இரும்பு அறுக்கும் இயந்திரம் மூலம் உடைத்து மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யுவராஜ் (26) மற்றும் மற்றொரு இளைஞரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து 5 பேரின் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் இன்று அதிகாலை செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டம் பகுதியில், பண்ருட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் சமத். இவர் சவுதிக்கு கிளம்பிய நிலையில், அவரை வழி அனுப்ப அவரது மனைவி ஜெய் பினிஷா (40), மகன்கள் மிச்சால் (20), பைசல் (12), மற்றும் மகன் அத்தல் (16) ஆகியோர் சென்னை விமான நிலையம் சென்றிருந்தனர். அவரை வழியனுப்பி விட்டு காரில் பண்ருட்டி திரும்பி கொண்டிருந்தனர். காரை சரவணன் (50) என்பவர் ஓட்டி வந்தார்.
அந்த கார் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வந்த போது முன்னே சென்ற லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சரவணன், ஜெய் பினிஷா, மிச்சால், பைசல் ஆகியோர் உயிரிழந்தனர். அருகில் இருந்த மக்கள் காரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அத்தல் என்பவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.