சவுக்கு சங்கரை பேட்டி எடுத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை- பெலிக்ஸ் ஜெரால்டு வாக்குமூலம்
1 min read![](https://www.seithisaral.in/wp-content/uploads/2024/05/சவுக்கு-பெலிக்ஸ்.jpg)
There was no ulterior motive in interviewing Chavku Shankar- Felix Gerald confesses
22.5.2024
தமிழக பெண் போலீசாரை தவறாக விமர்சித்ததாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த 10-ந்தேதி டெல்லியில் திருச்சி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ரெயில் மூலம் அழைத்து வந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் போலீஸ் தரப்பில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி நீதிபதி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதை தொடர்ந்து போலீசார் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது அவர் கூறுகையில், சவுக்கு சங்கரின் பேட்டி பரபரப்பாக பேசப்பட்டு வந்ததால் அவரை பேட்டி எடுத்து எங்கள் சேனலில் ஒளிபரப்பு செய்தேன்.
இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த தலைவரின் தூண்டுதலின் பேரிலும் இதை செய்யவில்லை.
பெண் போலீசார் குறித்த சர்ச்சைக்குரிய கருத்தினை தவிர்த்து இருக்கலாம். இவ்வளவு பிரச்சனையாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
போலீஸ் காவலுக்கு பின்னர் மீண்டும் நேற்று மதியம் திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 27-ந்தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் திருச்சி மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.