நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு இந்தியா கூட்டணிக்குச் செல்வார்களா?
1 min read
Will Nitish Kumar, Chandrababu Naidu join India alliance?
4.5.2024
இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டு நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துரித கதியில் நடந்தது. . கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலைப் போல் அறுதியிட்டுக் கூறிவிட முடியாதபடி முன்னிலை நிலவரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே வருகிறது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து காங்கிரஸ் அமைத்த இந்தியா கூட்டணி பாஜகவின் என்.டி.ஏ கூட்டணிக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்து வருகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இந்தியா கூட்டணி 236 இடங்களிலும் என்.டி.ஏ கூட்டணி 289 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. சுமார் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ள நிலையில் நேரம் செல்ல செல்ல இரண்டு கூட்டணிக்கும் சாதக பாதகங்கள் மாறுபடுகிறது.
இந்நிலையில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணிக்குப் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜே.டி.யுவும், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசமும் துருப்புச்சீட்டாக மாறியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலோடு ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலும் நடந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கணிசமான வாக்குகளைப் பெற்று மொத்தம் உள்ள 25 இடங்களில் 16 இடங்களில் முன்னிலையில் உள்ளது.பீகாரில் நிதிஷ்குமாரின் ஜே.டி .யு கட்சி மொத்தம் உள்ள 30 இடங்களில் 13 இடங்கள் முன்னிலையில் உள்ளது.
இந்த இரண்டு கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தெலுங்கு தேசமும் ஜே.டி.யுவும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்கும் பட்சத்தில் ஆட்சியமைப்பதில் இந்தியா கூட்டணியின் கை ஓங்கும். இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ்குமார் கடைசி நேரத்தில் பாஜகவுக்குத் தாவியது குறிப்பிடத்தக்கது.