June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பாபநாசம், சேர்வலாறு அணைகள் நீர்மட்டம் உயர்வு

1 min read

Papanasam, Chervalar dams water level rise

9.5.2024
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை மழை இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக சற்று அதிகமாக பெய்தது. தொடர்ந்து சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

நெல்லை மாநகரில் நேற்று பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், பிற்பகலில் திடீரென சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து வள்ளியூர், ராதாபுரம் மற்றும் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. ராதாபுரம் சுற்று வட்டாரத்தில் அதிக பட்சமாக 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாகவே சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று கனமழை பெய்தது. பகலில் தொடங்கி மாலை வரையிலும் பெய்த கனமழையின் காரணமாக பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 77.10 அடியாக இருந்த நிலையில், தொடர் கனமழையின் காரணமாக ஒரே நாளில் 4½ அடி உயர்ந்து இன்று 81.80 அடியை எட்டி உள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 91.14 அடியாக இருந்த நிலையில் இன்று 101.64 அடியை எட்டி உள்ளது. ஒரே நாளில் அந்த அணையின் நீர்மட்டம் 10½ அடியை எட்டி உள்ளது. நேற்று வரை 2 அணைகளுக்கும் வினாடிக்கு 850 கனஅடி நீர் மட்டுமே வந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 4 ஆயிரத்து 2 கனஅடி நீர் அணைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது.

பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 14 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 82.27 அடியாக உள்ளது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் முழு வீச்சில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காக்காச்சி எஸ்டேட்டில் 66 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கில் 10.8 சென்டி மீட்டரும், ஊத்து பகுதியில் 9 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலையில் 17 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 22 மில்லிமீட்டர் மழை பெய்தது. கொடு முடியாறு அணையில் 16 மில்லிமீட்டரும், கருப்பாநதி மற்றும் குண்டாறு அணை யில் தலா 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

கருப்பாநதி நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 57 அடியாக உள்ளது. குண்டாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 20.12 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 58 அடியாகவும் இருக்கிறது. தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. மேலும் இதமான காற்றும் வீசியதால் ரம்மிய மான சூழ்நிலை நிலவியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.