பதவி காலம் குறைப்பு: தென்காசியில் பஞ்சாயத்து தலைவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
1 min read
Tenure Reduction: Tenkasi Panchayat Leaders Attentive Demonstration
15/5/2024
தென்காசியில் மாவட்ட ஊராட்சி மன்ற 221 கூட்டமைப்பு தலைவர்கள் தங்களது பதவி காலத்தை 5 ஆண்டுகள் நீடிக்க கோரி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 9 மாவட்ட உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்களின் பதவிக்காலம் வருகின்ற 2026 ஆம் வருடம் வரை உள்ளது. முன்னதாக 2019-ல் 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. அவர்களுடைய பதவிக்காலம் வருகின்ற டிசம்பர் மாதம் முடிவடைகிறது.
வருகின்ற டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைவதால் அதோடு சேர்த்து 2021 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப் பட்ட தென்காசி உட்பட ஒன்பது மாவட்டங்களின் உள்ளாட்சிகளை யும் கலைத்து ஒரே தேர்தலாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
.
இதன்மூலம் 5 ஆண்டு கால பதவியை மூன்று ஆண்டுகளாக குறைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் எனக் கோரி தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற 221 கூட்டமைப்பு தலைவர்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
கடந்த 2019 ஆம் ஆண்டு 27 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெற்று அவர்களுடைய பதவிக்காலம் முடிவடைவதால் அந்த மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்துவது சரியானது ஆனால் 2020 வரை பதவிக்காலம் உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்துவது இரண்டு ஆண்டுகளை குறைப்பது எங்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது நாங்கள் மத்திய மாநில அரசினுடைய ஆளுமையை ஏற்று திறமையாக செயல்பட்டு வருகிற எங்களுடைய பதவியை குறைப்பது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது ஆதலால் தமிழக முதல்வர் அவர்கள் எங்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று 5 வருடங்கள் எங்களது பதவிக்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும் என பல கோரிக்கை மனுக்களை அளித்து உள்ளோம் எங்கள் கோரிக்கையை ஏற்று 5 ஆண்டுகள் நாங்கள் செயல்பட உறுதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு 221 ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டமைப்பு தலைவர் கோவிந்தப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் டி கே பாண்டியன் தலைமை வகித்தார்.
தென்காசி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் மாவட்ட பொது செயலாளர் மடத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒருங்கிணைப்பாளர்கள் பெரிய பிள்ளை வலசை ஊராட்சி மன்றத்தலைவர் பொறியாளர் க.இ.வேலுச்சாமி, கிளாங்காடு ஊராட்சி மன்ற தலைவர் கொ.சந்திரசேகர்,மாவட்ட துணைத் தலைவர் சேந்தட்டியாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அன்புராணி மாவட்ட செயலாளர் கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் மாவட்ட பொது செயலாளர் வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டியன் மாவட்ட துணை தலைவர் முத்தையா, நடுவகுறிச்சி மைனர் பஞ்சாயத்து தலைவர் சிவஆனந்த், மற்றும் 10 ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த தலைவர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐந்து ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவியை முழுமையாக பணியாற்றிட உறுதி வழங்க வேண்டும், பதவி காலத்தில் இறந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் பழைய குற்றால அருவியை பராமரிக்க பாதுகாக்க ஆயிரப்பேரி ஊராட்சியிடம் இருந்து வனத்துறைக்கு மாற்றுவதை வன்மையாக கண்டிப்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தீர்மானங்களாக நிறைவேற்றினர்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக கோரிக்கை மனுவை அளிக்க பேரணியாக சென்றனர். பேரணியாக செல்வதை தடுத்து நிறுத்திய போலீசாருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏடிஎஸ்பி நாகசங்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பஞ்சாயத்து தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கமல் கிஷோர் இல்லாத காரணத்தினால் மற்றொரு நாளில் கோரிக்கை மனு வழங்குவதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கிளம்பி சென்றனர்.