ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் மீது துணைத்தலைவர், உறுப்பினர்கள் புகார்
1 min read
Vice-chairman, members complaint against Audhaiyanur panchayat chairman
30.5.2024
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சியில் நடைபெற்ற ஊராட்சி மன்ற சிறப்பு சிறப்புக் கூட்டத்தை துணைத்தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் புறக்கணித்து வட்டார வளர்ச்சி அலுவலர் இடம் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி சிறப்பு கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் (எ) கோபி தெரிவித்திருந்தார். அதன்படி நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நாகராஜன், செல்வன், தங்கப்பாண்டி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். துணைத்தலைவர் மகேஸ்வரி தலைமையில் 12 உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
இதனிடையே கூட்டத்தை புறக்கணிக்க துணைத்தலைவர் மகேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு சென்று அங்கு வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) சந்தித்து புகார் கடிதம் ஒன்றினை அளித்தனர்.
அக்கடிதத்தில் கடந்த 26-03-2024 அன்று நடைபெற்ற ஊராட்சி மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றிய தலைவரின் நடவடிக்கையை கண்டித்து 12 உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்தோம்.
அதன்பின் இன்றுநடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற சிறப்பு கூட்டத்திலும் வார்டு உறுப்பினர்களாகிய நாங்கள் அளித்த கோரிக்கை தீர்மானத்தில் இடம்பெறவில்லை. எனவே எங்கள் கோரிக்கையை ஏற்க மறுக்கும் ஊராட்சி தலைவரை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்ததாக தெரிவித்தனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்திற்கு திரண்டு வந்திருந்த ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 30க்கும் மேற்பட்டோர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தங்கள் வார்டு பகுதியில் உள்ள குறைகளை வார்டு உறுப்பினர்கள் யாரும் கேட்பதில்லை, கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதில் அலட்சியம் காட்டுகின்றனர். தொடர்ந்து அவர்கள் ஊராட்சி கூட்டத்தை புறக்கணிப்பது கண்டனத்துக்குறியது. என கோஷங்களை எழுப்பினர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஊராட்சி செயலரிடம் அளித்தனர்.