தென்காசி நகர் மன்ற கூட்டம் துணைத் தலைவர் பரபரப்பு புகார்
1 min read
Tenkasi Nagar Council meeting vice president complaints
30.5.2024
தென்காசி நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் தலைவர் ஆர்.சாதிர் தலைமையில் துணைத் தலைவர் கே என் எல் சுப்பையா நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது தொடர்பாக பேசினார்கள். அப்போது நகர் மன்ற துணைத் தலைவர் கே என் எல் சுப்பையா தென்காசி வடக்கு மாசி வீதியில் உள்ள பொதுமக்களின் உபயோகத்தில் பயன்படுத்தி வரும் நல்ல நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடிக்கக் கூடாது எனவும் சில கவுன்சிலர்கள் தனிநபரின் லாபத்திற்காக பணத்தைப் பெற்றுக் கொண்டு குடிநீர் தொட்டியை இடித்து தருவதாக பேரம் பேசி உள்ளனர் எனவும் அதிரடியாக தெரிவித்தார்.
இதனால் கவுன்சிலர்களுக்கும் துணைத் தலைவர் கே என் எல் சுப்பையாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கே எல் சுப்பையா கவுன்சிலர்கள் தனி நபரிடம் 15 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு சாதகமாக நல்ல நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியை இடிக்க முன்வந்ததாகவும் குற்றம் சாட்டினார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
அதே போல் தென்காசி நகராட்சிக்கு சொந்தமான தினசரி காய்கறி சந்தை இடிக்கப்பட்டு அதில் புதிய கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது பழைய கட்டுமானங்களை இடித்து அகற்றுவதற்கு ஏற்கனவே நகர்மன்ற கூட்டத்தில் ரூபாய் 28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேலும் 10 லட்சம் ரூபாய் இடித்து அகற்றும் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பழைய கட்டிடத்தை இடித்து அகற்றுவதற்கு ஏன் 38 லட்சம் செலவு செய்ய வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் மற்றும் பல கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த தலைவர் ஆர்.சாதிர் 28 லட்சம் மதிப்பீடு செய்து கடடிடங்களை இடிக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் அந்த பணம் கட்டுமானங்களை அகற்றுவதற்கு போதவில்லை எனவே மேலும் 10 லட்சம் ஒதுக்கீடு செய்ய தீர்மானம் கொண்டு வந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
தென்காசி நகர் மன்ற துணைத் தலைவர் கே என் எல். சுப்பையா இதுகுறித்து தெரிவித்ததாவது,
தென்காசி வடக்கு மாசி வீதியில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நல்ல நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து விட்டு அதன் அருகில் சின்டெக்ஸ் டேங்க் வைக்க நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தனி நபரின் ஆதாயத்திற்காக நல்ல நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடிக்க கூடாது என நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் அதனை இடிப்பதிலேயே நகராட்சி நிர்வாகம் மும்முரமாக எனவே அதனை இடிக்க கூடாது என மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாக துறை ஆணையர் ஆகியோரிடம் தான் மனு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் குடிநீர் தொட்டியை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்ததை நகராட்சி ஆணையரிடமும் நகர்மன்ற பொறியாளரிடமும் வழங்கினார்.