வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
1 min read
1.52 lakh crores allocation in the budget for agriculture department‘
23.7.2024
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட் 2024-ஐ தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதன்படி, வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றார். இது கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் கோடியாக இருந்தது. இதனால், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டில் இந்த தொகை ரூ.27 ஆயிரம் கோடி அதிகரித்து உள்ளது.
இதேபோன்று, கடுகு, நிலக்கடலை, சூரிய காந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இவை எண்ணெய் சார்ந்த வித்துகளுக்காக பயன்படுத்தப்பட்டு, அவற்றில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை மேற்கொள்ள உதவும்.
வேளாண் துறையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றார். வேளாண் துறையில் டிஜிட்டல் முறை புகுத்தப்படும். டிஜிட்டல் முறையில் காரீப் வேளாண் பொருட்கள் தொடர்பான சர்வே எடுக்கப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மையை மேற்கொள்ள 1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதனால், ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் இணைவார்கள். வேளாண்மையில் உற்பத்தி மற்றும் விற்பனை திறனை மேம்படுத்த பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.