குற்றாலம் ஐந்தருவி பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை-சுற்றுலா பயணிகள் பீதி
1 min read
A wild elephant entered the area of Courtalam Aindaruvi- Tourists panic
1.8.2024
தென்காசி மாவட்டம்,குற்றாலம் ஐந்தருவி பகுதிக்கு நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. அதனை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் அந்த காட்டு யானை சாலையை கடந்து தென்பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் அருகே சிறிது நேரம் வட்டம அடித்தவாறு நின்றுள்ளது. இந்தச் செய்தியை அறிந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
இது குறித்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரகர் சீதாராமன் தலைமையில் வனத்துறையினர் ஐந்தருவி பகுதிக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே சுமார் அரை மணி நேரம் வட்டம் அடித்த யானை மீண்டும் சுற்றுச்சூழல் பூங்கா வழியாக வனப்பகுதிக்குள் திரும்பிவிடடது. எனினும் வனத்துறையினர் வெடி வெடித்து அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதை உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் அந்தப் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று அவ்வப்போது வந்து செல்லும். ஏற்கனவே ஒன்று இரண்டு முறை இதேபோன்று வந்துள்ளது.
சுற்றுச்சூழல் பூங்கா அருகே உள்ள மூங்கில் மரங்களில் கிளைகளை உண்பதற்காக வந்திருக்கலாம். ஆனால் இம்முறை சாலையை கடந்து வந்த யானை அங்கிருந்து உடனடியாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது என்று தெரிவித்தனர்.
ஐந்தருவி பகுதிக்கு காட்டு யானை வந்தது தெரிந்தவுடன் ஐந்தருதியில் குளித்துக் கொண்டு இருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக அந்தப் பகுதியை விட்டு வெளியேற போலீசார் உத்தரவிட்டனர். மேலும்
குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்கு வாகனங்கள் செல்ல விடாமல் வனத்துறையினரும் போலீசாரும் தடுத்து போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.
குற்றாலம் வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை திடீரென ஐந்தருவி பகுதிக்கு வந்து சாலையை கடந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்குள் வந்ததால் அந்த பகுதியில் மட்டுமன்றி குற்றாலம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மத்தியிலும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சிறிது நேரத்தில் சமாபவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நன்றி தெரிவித்தனர்.