கேதார்நாத்தில் நிலச்சரிவு.. 200 யாத்ரீகர்களின் நிலை என்ன?
1 min read
Landslide in Kedarnath.. What is the status of 200 pilgrims?
1.8.2024
உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் பெண்ணும், அவரது மகளும் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.
இந்நிலையில் கேதார்நாத்தில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. திடீரென பெய்த கனமழையால் மந்தாகினி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் நடைபாதையின் சுமார் 30 மீட்டர் தூரத்திற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. கேதார்நாத்தில் கிட்டத்தட்ட 200 யாத்ரீகர்கள் சிக்கித் தவித்தனர்.
மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து கேதார்நாத்தில் சிக்கித்தவிக்கும் 150 முதல் 200 யாத்ரீகர்கள் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். அதே நேரத்தில் சன்னதிக்கு செல்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, மற்றொரு மேக வெடிப்பு காரணமாக கேதார்நாத் நடைபாதையில் பீம் பாலி ஓடையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாதை சேதமடைந்தது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டது. இருப்பினும், மேக வெடிப்பைத் தொடர்ந்து இதுவரை எந்த உயிரிழப்பும் அல்லது காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.