பாவூர்சத்திரம் பாலப்பணியை விரைந்து முடிக்க பாதுகாப்பு குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
1 min read
Tenkasi District Road Safety Committee meeting
2.8.2024
தென்காசி மாவட்ட சாலை பாதுகாப்பு குழு கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையில் நடைபெற்று வரும் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
இந்த கூட்டத்தில் சாலை பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் பேசும்போது, நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையின் முக்கிய பகுதியாக இருக்கும் பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பால பணி இரண்டு ஆண்டுகளாக நிறைவு பெறாமலும், ரயில்வே வரைபட ஒப்புதல் கிடைக்கப்பெறாமலும் தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது.
இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமப்புறங்கள் வழியாக பேருந்துகளை வழிமாற்றம் செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், கிராமப்புறங்கள் வழியாக பேருந்து வழிமாற்றம் செய்யக்கூடாது, மத்தளம்பாறை – பழைய குற்றாலம் – குற்றாலம் சாலையை சீரமைக்க வேண்டும், தென்காசி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தென்காசி புறவழிச்சாலை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும், குத்துக்கல்வலசை – இலஞ்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும், ஆழாவார்குறிச்சி , செங்கானூர் சுரங்க பாதைக்கு தீர்வு காண வேண்டும்.